புதன், 14 ஆகஸ்ட், 2013

இங்கே சொன்னது அங்கே நடக்கிறது!

Blog post image #1
எல்லோரும் எளிதாக சொல்லிவிடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப்புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், ‘மகாத்மா’
-இப்படிச் சொல்கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ‘ராமலீலா’ கொண்டாடி, ராவணன்- அவன் தம்பி கும்பகர்ணண்-மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ‘நாளைய பிரதமர்’ கனவு காணும் ராகுல்காந்தி எல்லோருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள். ஆனால், ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்? Times of India நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான். (தமிழ் மறை எனப் போற்றப்படும் திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.
‘’நீங்கள் சித்தரிப்பது போல ராவணன் அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை வலிமையான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை வழிபடுகிறோம்” என்று ஆதி தரம் சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர்கள், ராவண பூஜை நடத்துகிறார்கள். தசராவில் தீ அம்புகள் பாயும் பொழுதில், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படுகின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின்றனர்.
ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும் ஜலந்தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். “நாங்கள் வழிபடும் ராவணனை விஜயதசமி நாளில் கொடும்பாவியாக கொளுத்துவதை ஏற்கமுடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரதமருக்கு இது குறித்து மனு அனுப்பியிருக்கிறோம்” என்கிறார் பாரதிய தலித் சேனா நிறுவனர் அருண் சித்து.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண்டாடுகிறார்கள். காரணம், ராவணனின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர்கள் ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு நடக்கிறது.
முதன்முதலில், ‘ராவணன் எங்கள் பாட்டன்” என்ற குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார்கள். இதுகுறித்து, கம்பராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர்களுடன் நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது. ராமலீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம்மையார்.
ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள். தீ பரவட்டும்….

கருத்துகள் இல்லை: