வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் எனது பிறப்புரிமை-ஜெகன். – ச.ச.முத்து

சிங்களதேசத்தின் தலைநகரில் இதற்குமுன்னர் இப்படியான ஒரு விடுதலைப்பிரகடனம்,சுதந்திரமு
ழக்கம் தமிழர்கள் சார்பில் நிகழ்த்தப்பட்டதே இல்லை என்றே அன்றைய சரித்திரநிகழ்வை வரலாறு பதிவுசெய்திருக்கும்.
Jegan1982 ஓகஸ்ட் மாதம் சிங்களதேசதலைநகரின் உயர் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட ஒரு விசாரணையில் தீர்ப்பு சொல்லப்படுவதற்கு முன்னர் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்த இருவரிடமும் நீதிபதி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது அவர்கள் கூறியவைகள்தான் சிங்களதேசத்தை அதிரவைத்தது.
தமிழீழவிடுதலைமீதான தமிழர்களின் இலட்சியப்பற்றையும் தமிழீழதாயத்தின்மீதான ஒப்பற்ற வாஞ்சையையும் அந்த நீதிமன்ற பிரகடனங்கள் என்றென்றும் மீளவும் மீளவும் சொல்லியபடியே முப்பதாண்டுக்கும் மேலாக எதிரொலித்தபடியே இருக்கின்றன.
“என்னை நீங்கள் தூக்கிடலாம்.ஆனால் சுதந்திரதமிழீழம் மலர்வதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது”
“சுதந்திரம் எனது பிறப்புரிமை”.”எனக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமையை எமது இளையசமூகம் என்றாவது ஒருநாள் அடைந்தே தீருவார்கள்.”
“எனது உடலை யாழ்பல்கலைகழக மருத்தவபீடத்துக்கு வழங்கிவிடுங்கள்”.
“எனது கண்களை பார்வையற்ற ஒருவருக்கு வழங்குங்கள்.அதன்மூலம் மலர இருக்கும் தமிழீழத்தை நான் தரிசிப்பேன்.”
தமிழீழம் வாழ்க
என்று எந்தவொரு அச்சமும் இன்றி சிங்களதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் பிரகடனம்செய்த ஜெகன் என்ற மகத்தான ஒரு வீரனை பற்றிய ஒரு நினைவுகுறிப்பு இது.
அழகாக சிறுசிறுஅலைகளுடன்,சிலநேரங்களில் பளிங்குபோன்ற மௌனத்துடன் நீண்டிருக்கும் ஆற்றின் அருகில் அழகாக அமைந்த தொண்டமானாறு ஜெகனின் ஊர்.ஒரு புறம் அழகாக தலைவரித்து காற்றுக்கு ஆடிநிற்கும் தென்னைமரங்கள் நிறைந்தும் மறுபுறத்தில் நீலநிற கடல்அலைஉடுத்தும், இன்னொரு பக்கத்தில் எந்தநேரமும் ஆலயமணி எழுப்பும் சந்நிதியான் ஆலயவளாகமும் இந்த ஊரின் தனிஅழகுகள்.மறுபுறத்தில் தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் இந்த ஊருக்கென்று ஆழமான வரலாற்றுப்பதிவுகள் நிறைய உள்ளன.
தமிழீழம்தான் ஒரே தீர்வு.தமிழீழதாயவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போரிடவேண்டும் என்று தேசியதலைவரின் மனதில் வித்து ஒன்று வீழ்ந்துமுளையானபோது அவர் யாரிடம் சென்று முதலில் இணைந்ததாக தனது விடுதலைத்தீப்பொறி என்ற ஆவணத்தில் கூறுகிறரோ அதே தங்கண்ணாதான் ஜெகனின் விடுதலைப்போராட்டவருகைக்கும் காரணமாக அமைந்துவிடுகிறார்.
தமிழீழதாயவிடுதலைக்கான ஜனநாயவழிப்போராட்டங்கள் சிங்களஅரசுகளால் மோசமான மூர்க்கமான இராணுவ-பொலீஸ் வன்முறைகளாலும்,சிங்களகுண்டர்களாலும் அடித்துவிரட்டப்பட்டு கலைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே வரலாறு தமிழ்இளைஞர்களுக்கு இதற்கு மாற்றாக இன்னொரு தெரிவை முன்வைக்கிறது.அதுதான் ஆயுதரீதியான அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதந்தரித்த எதிர்ப்பு.அல்லது ஆயுதப்போராட்டம் என்பதாகும்.
jegan Kuttimani
இயல்பாகவே போர்க்குணமும் துறுதுறுப்பும்மிகுந்த ஜெகனை இந்த மாற்றங்கள் இலகுவில் பற்றிக்கொள்கின்றன.தங்கண்ணாவின் வீட்டுக்கு அருகாகவே ஜெகனின் வீடும் அமைந்திருந்ததால் ஜெகன் தங்கண்ணாவுடன் அவரின் ஆயுதப்போராட்ட அமைப்பில் இணைந்துகொள்கிறார்.
ஜெகனைப்பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக அவரின் அன்புக்குரியவர்,அவரின் போராட்டக்கால தோழர்கள் என்று அனைவரிடமும் கதைத்தபோது அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில் ‘ ஜெகன் பயம் என்பதே இல்லாத ஒரு வீரன்’ என்பதே ஆகும்.
விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் தமிழீழத்தில் முளைவிடத்தொடங்கிய 70களின் ஆரம்பத்திலேயே அதில் தன்னை இணைத்துக்கொண்டவர் ஜெகன்.மிக இளையவயதிலேயே அந்தநேரத்தில் இதில் இணைந்திருந்தார்.அதில் ஒரு செயற்பாட்டில் சிங்களபடைகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தகாலத்திலேயே சிறைக்குள்ளே இருந்தே ஜி.சி.ஈ(ஓ.எல்) பரீட்சைக்கு தோற்றி அதில் சிறப்பு சித்திகளும் எடுத்திருந்தார்.
ஜெகனின் போராடடவாழ்வுமுழுதும் துணிகரமான செயல்களும் அர்ப்பண உணர்வுமே மேலோங்கி இருந்ததை அறியமுடிகிறது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான பாதையின் முதற்கட்ட வேலைத்திட்டங்களான சிங்கள அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாகவும் தகவல் கொடுப்பவர்களாகவும் விளங்கிய தமிழர்களின் மீதான தாக்குதல்கள் அனைத்திலும் ஜெகனின் பங்களிப்பு அந்தநேரத்தில் அமைந்திருந்தது.
வெறும் கைத்துப்பாக்கிகளும் வேட்டைத்துப்பாக்கிகளும் உள்ளுர்த்தயாரிப்புகளான வெடிகுண்டுகளுமே போராளிகளின் ஆயுதங்களாக இந்த அந்த காலகட்டத்திலேயே சிங்களதேசத்தின் பொருளாதார கேந்திரங்களுககெதிரான தாக்குதல்களை சிந்தித்தும் அதனை தனது ஏனைய தோழர்களிடம் சொல்லிக்கொண்டும் இருந்தவர் ஜெகன்.
ஒருமுறை 70களின் இறுதியில் சிங்கள அரசாங்ககட்சியின் யாழ்மாவட்டபொறுப்பாளரான கணேசலிங்கத்துக்கெதிரான தாக்குதல் முயற்சி ஒன்று அவரின் வீடு இருந்த பருத்தித்துறை ஓராம்கட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.சிங்களகாவல் துறையின் பாதுகாப்பு எந்த நேரமும் அவரின் வீட்டுக்கும் அவருக்கும் இருந்திருந்த நேரம்அது. ஜெகனும் ஒருசில போராளிகளும் அந்த நடவடிக்கைக்காக சென்றிருந்தனர்.
யாழ்மாவட்ட ஐதேக கட்சியின் பொறுப்பாளரின் வீடு இரட்டைத்தளத்தை கொண்டிருந்தது.அதன்மேல் தளத்தில் எந்தநேரமும் சிங்களகாவல்துறையினர் துப்பாக்கிகளுடன் தயார்நிலையில் நின்றிருந்தனர்.
தாக்குதலுக்காக சென்றிருந்த போராளிகளிடம் வேட்டைத்துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளுமே இருந்திருந்தன.ஜெகனிடம் இரட்டைகுழல் வேட்டைத்துப்பாக்கி இருந்தது.நெஞ்சு நிறைந்த துணிச்சலும் வென்றாக வேண்டும் விடுதலையை என்ற வெஞ்சினமும் வேட்கையும் மட்டுமே துணையாக இருந்தது.
தாக்குதல்தொடங்கியது இரட்டைக்குழல்துப்பாக்கியில் இருந்த இரண்டுதோட்டாக்களும் பாவித்து வெளியேறிவிட்டன.மறுபடியும் நிரப்பியபின்னரே சுடமுடியும்.தோட்டாக்கள் நிரப்ப உதவியாக இருந்தவர் மேலிருந்து சிங்களகாவல்படை சுடுவதை கண்டதும் சுவருக்கு மறுபக்கம் சென்று ‘கவர்’ எடுத்துவிட்டார்.
தொடர்ச்சியாக மேலிருந்து சிங்களகாவல்படையின் சூடுகள் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அந்தநேரத்தில்தான் ஜெகனின் ஒப்பற்ற துணிவு வெளிப்பட்டது.தோட்டாக்கள் இல்லாத வெறும் இரட்டைக்குழல் துப்பாக்கியை நீட்டியபடி சத்தமிட்டுக்கொண்டு யாழ்மாவட்ட ஐதேக அமைப்பாளரின் வீட்டு கேற்றை உதைத்து தள்ளிபடி உள்நுழைந்தார். மேலே இருந்து சுட்டுக்கொண்டீரந்த சிங்களகாவல்படையினர் இதனை கண்டதும் அலறிபடியே மறுபக்கத்தால்கீழே குதித்து தப்பி ஓடினர்.
இப்படி ஜெகனின் போராட்டவாழ்வு முழுதும் நிதானமான வீரமும்,அளவுகடந்த போர்க்குணமும்,அதீத
துணிச்சலும்,எந்த நேரமும் அர்ப்பணத்துக்கு தயாரான மனோநிலையுமே நிறைந்திருந்தது.
அதிகம் கதைக்காதவரும் மிகவும் அமைதியாகவே எந்த நேரமும் காணப்படுபவருமான ஜெகனின் இன்னொரு பக்கத்தில் நிறைந்த இரக்கமும் அன்பும் பொங்கி இருந்தன.
எந்த வெலிக்கடைசிறைக்குள் ஜெகன் சிங்களகைதிகளால் கொல்லரப்பட்டாரோ அந்த சிறைக்குள் இருந்த சிங்களகைதி ஒருவன் தனது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மகனுக்கு மருத்துவஉதவி இல்லாமல் இருப்பதை சொல்லி கண்ணீர்வடித்தபோது ஜெகன் தன்னை பார்க்க வெளியில் இருந்து வந்தவர்களிடம் சொல்லி அந்த சிங்களகைதியின் மகனின் மருத்துவஉதவிக்கு உதவுமாறு கேட்டிருந்தார்.
தமிழீழவிடுதலைப்புலிகள் முதன்முதலில் உரிமைகோரி வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தாக்குதல்களில் ஒன்றான தாடி தங்கராசாவின் அழிப்பு சம்பவத்தில் ஜெகனுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.
இப்படியாக தனது இளமை,காதல்வாழ்வு,அன்பானகுடும்பம்,அம்மா,அப்பா,சகோதரங்கள் என்று அனைத்தையும் துறந்து தமிழீழதாயகவிடுதலைக்கான போராட்டத்தில் முன்னெழுந்த வீரர்களில் ஒருவரான ஜெகனையும் அவருடன் மற்றைய வீரர்களையும் கோழைத்தனமாக சிங்களபேரினவாதம் சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலைசெய்த முப்பதாவதுவருடம் இது.
ஜெகன்,குட்டிமணிஅண்ணா,தங்கண்ணா,நடேசதாசன்அண்ணா,குமார்,தேவன் உட்பட இவர்களுடன் வெலிக்கடசிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட அனைவரும் எமது மக்கள் அனைவரும் அடிமைவாழ்வுவையே போர்வையாக எண்ணி போர்த்திக்கொண்டு நீண்ட உறக்கம்செய்துகொண்டிருந்த பொழுதில் ஒரு பெரும் இலட்சியவேட்கையுடனும் வீரத்துடனும் விடுதலைக்காக களமாடியவர்கள்.
இவர்கள் அனைவரதும் கனவு தமிழீழம்.அதனை அடைவதற்காக பெரும் பாதை மிகமிக நீண்டதாக எம்முன்னால் விரிந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீள்கிறது.
ஆயினும் நாம் சோர்ந்துவிடாமல் முன்னோக்கி முன்னோக்கி நடந்தேதீரவேண்டும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் எம்மை கடந்துபோகினும் ஜெகன் சிங்களத்தின் உயர் நீதிமன்றத்தில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி கூறிய அந்த வார்த்தைகள் ஒருபோதும் கருத்திழந்து போகாது.
அது என்றென்றும் எமது உயிர்கலந்து ஒலிக்கும்.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை.எனக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமையை எமது இளையசமூகம் என்றாவது ஒருநாள் அடைந்தே தீருவார்கள்.’
‘தமிழீழம் மலர்வதை எந்த சக்தியாலும் தடுத்திடமுடியாது’-ஜெகன் (1982ல் கொழும்பு உயர்நீதிமன்றில்)

கருத்துகள் இல்லை: