சனி, 31 ஆகஸ்ட், 2013

போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள்



போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள். வீரனுடைய திருவுருவம் அந்த நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும். வீரர்களை போற்றி வழிபட்டதைப் போலவே,கொற்றவைக்காகவோ அல்லது பொது மக்களின் நன்மைகளுக்காகவோ உயிர் தியாகம் செய்த தியாகிகளையும் ,தமிழர்கள் சிலையில் வடித்துப் போற்றி வழிபட்டு வந்தார்கள்.அச்சிலைகள் சாவான் சிலைகள் என்றும் நவகண்டம் என்றும் பொதுவில் வழங்கப்படுகின்றன.தங்கள் உடம்பில் உள்ள ஒன்பது உறுப்புகளையும் தாங்களாகவே அறுத்துக் கொடுத்துக் கொற்றவையை வழிபட்டதால் "நவகண்டப்பலி" என்று அது கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் பல இடங்களில் சாவான் சிலைகளைக் காணலாம்.ஆனால் அச்சிலைகளில் எதன் பொருட்டு ,யார் அந்த பலியைக் கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டிருப்பது அபூர்வம். அருகே காணப்படும் நவகண்டப்பலி வீரனின் சிற்பத்தில் அவன் பெயரும் செய்தியும் பொறிக்கப்பட்டிருப்பதால், இது முக்கியமான சிலையாகக் கருதப்படுகிறது.இதில் உள்ள வீரன்,தன் இடக்கையில் தன் தலை மயிரைக் கற்றையாக இழுத்துப் பிடித்துக் கொண்டு வலக்கையில் வாள் பிடித்துக் கழுத்தின் பின் பக்கமாகத் தன் தலையை அறுத்துக் கொள்கிறான். அவன் முகத்தில் துன்பத்தின் சாயலே இல்லை.புன்சிரிப்புடன் உயிர்த் தியாகம் புரியும் அவன் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் காணப்படுகின்றன.இச்சிலையில் பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. "தைஞ்சு செய்யன் கொழகனுக்கு இராவிலே...கங்க...நம்பி செ குடுத்தார் ராஜேந்திர நாந சோழ தந்ம செட்டியார்கு எழுத்து" என்ற தொடர் காணப்படுகிறது.செய்யன் கொழகன் என்பவனுக்கு இரவிலே என்ன நடந்தது... ராஜேந்திரனான சோழ தன்ம செட்டியார் யார் என்று தெரியவில்லை. புதுவை வரலாற்றுச் சங்கத் தலைவரும் புதுவை மாவட்ட ஆட்சித் தலைவருமாகிய பி.எல்.சாமி தலைமையில் தாதாபுரம் வட்டாரத்தில் கள ஆய்வுப்பணி நடை பெற்ற போது,இந்தச் சிலை கல்லேரியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்டது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணனும் பாகூர் குப்புசாமியும் இச்சிலை பற்றிய கள ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

பண்டை தமிழர் நாகரீகம் ..


பண்டை தமிழர் நாகரீகம் ....தமிழ்நாட்டில்
இத்தனை வருடங்களில் கிடைத்திருக்கும்
கல்வெட்டு ஆதாரங்களில் மிகப் பழைமையான
கல்வெட்டுக் குறிப்புகளை சமீபத்தில்
கண்டுபிடித்திருக்கிறார் கவிஞர் பழனிவேள்.
திருவண்ணாமலைப் பக்கமுள்ள தொண்டமனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் இந்த
‘குறியீட்டு எழுத்துக்கள்' ஏறக்குறைய 35 ஆயிரம்
ஆண்டுகள் முதுமை கொண்டவை எனக்
கணித்திருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால்
இந்தப் பாறை எழுத்துக்கள்
ஆற்றுவழி நாகரிகத்தை ஒட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதுதான். இந்தப் பண்பாட்டுப் பெருமை குறித்து பழனிவேளிடம்
பேசினோம். ‘‘ஏழாண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிகளில்
சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன்னாலான தேடுதலில் பலவிதமான
தாழிகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தாழிகள்
குறித்த தேடுதலில் இருக்கும் சமயத்தில்தான் இந்தப்
பாறை எழுத்துக்கள் தற்செயலாக கானி ஆத்தா கோயில் பக்கம் என் கண்களில்
அகப்பட்டன. இந்த மாதிரியான
குறியீட்டு எழுத்துக்கள் இதற்கு முன்னால் மேற்குத்
தொடர்ச்சி மலைகளையொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு இணையான எழுத்து வடிவம்
இலங்கை ஆணைக்கோட்டையில் கிடைத்திருப்பதாக அறிந்தேன். இந்த எழுத்துக்களின்
ஆராய்ச்சி இதற்கு சுமார் 50 முதல் ஒரு லட்சம்
ஆண்டுகள் வயதிருக்கலாம் என கணிக்கிறது"
என்று புதிய தகவல்களைத் தந்த பழனிவேள் மேலும்
தொடர்ந்து பேசினார். தென்பெண்ணை ஆற்றின் நாகரிகம்
எவ்வளவு பழைமையானது என்பதை இந்தக் கல் ‘குறி’
எழுத்துகள் மூலம் தெரிந்துகொண்ட பழனிவேளின்
இந்தக் கண்டுபிடிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள்
வந்த பின்பும் கூட அரசு சார்பில் எந்தவித
பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை யாம். கிடைத்த அரிய ஆவணத்தை அலட்சியம்
செய்யாமல் காக்குமா தமிழக அரசு?

"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.



உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?
அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான்தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிகசிறந்த ஒன்றாக
நானே இதை கூறுவேன். இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன். இந்த
இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன். தினமும் என் கணினியை தொடங்கியவுடன்
இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன். ஆனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும். நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்.
இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.


( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட
வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம்
பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும்
சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஆறாம்
"ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இனறு வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம்நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள்இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர்
" is of such
extraordinary construction that it
is not possible to describe it with
a pen, particularly since it is like
no other building in the world. It
has towers and decoration and all
the refinements which the human
genius can conceive of."
என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்தmகோயிலின் சிறப்பை வெயிட்டவுடன்m தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில்
One of
these temples—a rival to that of
Solomon, and erected by some
ancient Michelangelo—might take
an honourable place beside our
most beautiful buildings. It is
grander than anything left to us
by Greece or Rome, and presents
a sad contrast to the state of
barbarism in which the nation is
now plunged."
என்று குறிப்பிட்டுள்ளர். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட
பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால்
கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுளளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய
நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத
சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால்,
இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2013
வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும்
படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை!குறிப்பாக இது நம் தமிழ்
மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?! தேடல் தொடரும்..!!!

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத
தமிழர்களின் கட்டிடக்கலை
மற்றும்
பொறியியல் அதிசயமான
இசைத்தூண்கள் ..!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்:

அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்

திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
ஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)

ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்த தமிழன்


ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்.


ஆமைகளும் அழிக்கப்பட்டு அரிகிவருகிறது தமிழனும் அழிக்கப்படுகிறான்

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.
திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!? !?
திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங ்கள்.
இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார ்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக் கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.
நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!

யாழ் பல்கலைக் கழகத்தில் தாய்மொழி தமிழுக்கு தடை-(படங்கள் இணைப்பு)


தமிழ் பிறந்த மண்ணாம் யாழ்ப்பணத்தில் தாய்மொழி தமிழுக்கு தடை விதித்துள்ளார்கள். வடதமிழீழம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலங்களாக நிகழ்வுகளுக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் ?
கடந்த முறை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விதமான செயற்பாடும் இனவழிப்பில் ஒரு வகை என்பதை இங்கு ஆணித்தரமாக பதிவு செய்ய கடமைபட்டு இருக்கிறோம்
மொழி அழிந்து போனால், இனம் அழிந்து போகும்…!

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .

இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .

சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் .

சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.

லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .

கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது


தமிழனின் பெருமை .........

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான்உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!.


எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கு.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இறுதிப் போரில் மக்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய இந்தியக் கொடிதாங்கிய கப்பல்?


இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று நடைபெற்ற அதேவேளை, மேலும், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இன்னும் இரண்டு தினங்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.

புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

''பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தினுள் தாங்கள் இருந்தபோது, விமானத்திலிருந்து அந்தப்பகுதி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் எறியப்பட்டன என்றும் இந்த மனுக்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார் சட்டத்தரணி ரட்னவேல்.

'அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்' என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

இந்த வழக்குகள் யாவும் வரும் செட்படம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! – பழ. நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப் போகும் புதிய திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ.கௌதமன் கூறுகையில்,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படமாக இது இருக்கும். அவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! – பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

கிழக்கே சீனா முதல் மேற்கே உரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.

அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கிப் பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீர சாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்“ என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாஜீ சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லாவகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசீர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும், இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.

சோவியத் ஒன்றியம், இந்தியா, செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான்.

பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அண்டை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன. அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் நாடோ, எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் It is Unique… இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன்.

நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல். அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன்.

வள்ளுவ பேராசான் சொன்னது போல “இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.

அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிரம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன்.

மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழனின் வீரத்தையும் மானத்தையும் தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும் – இயக்குனர் கௌதமன்

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம்.
உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி.
அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலைக்காக போராடிய நம் இனம். உலகின் பெரும் வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து நம்மை சிதைத்துள்ளன. ஆனால் அது அத்தனையையும் தவிடுபொடியாக்கியது நம் அண்ணன் பிரபாகரன் படை.
ராஐராஐ சோழனுக்குப் பிறகு தமிழனின் வீரத்தையும் மானத்தையும் தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றினை ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் “எனும் புத்தகத்தின் வாயிலாக படித்தறியும் பொழுது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் சிலிர்த்தது.மேலும் அப்புத்தகம் என்னை அழ வைத்தது. தமிழரின் நிலை எண்ணி கலங்க வைத்தது. சொல்ல முடியாத கோபத்தை உண்டுபண்ணியது.
உலகத்தில் எத்தனையோ மன்னர்கள் இந்த மண்ணை ஆண்டுள்ளனர். அனால் அவர்களில் எத்தனைபேர் நேர்மையாக ஆண்டார்கள், எத்தனைபேர் மக்களுக்காக உண்மையாக பணிபுரிந்தார்கள் என பார்க்கும் பொழுது உலகம் தோன்றிய காலத்திலிருந்து இனி மறையப்போகிற காலம் வரையிலும் ஒரு உன்னதமான மன்னன், மக்களை நேசித்த அரசு, ஈழம்தான்.gowthamnஅந்த அற்புதத்தை ஒரு படைப்பாக தருவதற்கு நான் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றேன். என்னுடைய “சந்தனக்காடு” தொடர் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. தன்னை காப்பாற்ற ஓடிய ஒருவருடைய வாழ்கையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு தெரு அல்ல, ஒரு ஊர் அல்ல, ஒருதேசமே தியாகம் செய்திருக்கின்றது.தங்கள் உரிமைக்காகாவும் தங்களின் விடுதலைக்காகவும்.
அப்படிப்பட்ட பரிசுத்தமான தியாகத்தை, ஐயா நெடுமாறன் அவர்கள் எழுதிய ஆவணப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதில் பயணம் செய்து இந்த திரைப்படத்தை தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் தமிழினத்தின் தியாகத்தையும், வீரத்தையும் காண்பிக்கவுள்ளேன்.
இந்தப் படைப்பு வெளி வருவதற்கும், அதனை செய்து முடிப்பதற்கும், உலகத் தமிழினம் பெருத்த ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு படைப்பாளியாக, ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கின்றேன்.
.
-நன்றி-
வ.கௌதமன்

ஜீவாவும் தமிழும்

20 -ஆம் நூற்றாண்டு குமரி மாவட்டம் தமிழ்ச் சமூகத்திற்குத் தந்த முத்துக்களில் சிறந்த ஒரு முத்து, பூதப்பாண்டி தந்த சொரிமுத்து. இந்த முத்து தான் ஜீவானந்தமாகி, தூய தமிழ் உயிர் இன்பனாகி, தமிழ் கூறும் நல்லுலகத்தால் என்றும் அன்போடு போற்றப்படுகின்ற பேரா சான் ஜீவா.
மிக இளமையிலேயே அவரிடம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வு பொங்கி நின்றது ஒரு பேரதிசயம். இல்லையென்றால், சாதி வெறி கொடிகட்டிப்பறந்த அந்தக் காலத்தில், மண்ணடி மாணிக்கம் என்னும் தம் வகுப்புத் தோழனான தலித் சிறுவனையும், இன்னும் இரு தலித் சிறுவர் களையும் தன்னோடு அழைத்துக்கொண்டு, துணிச்சலாக, மார்கழி மாத பஜனையைத் தனக்கு ஏற்ற விடுதலை பஜனையாக மாற்றிப் பாடியபடி, அந்த இளைஞர்களோடு, உயர் ஜாதிக்காரர்கள் வாழும் தன் ஊர்த் தெருக்களில் சுற்றி வந்து உதை வாங்கியிருப்பாரா அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன்? தலித் விடுதலை மட்டுமா? பக்திப் பாடலைச் சமூக விடுதலைக் காக மாற்றிப்பாடி, மக்களை வசப்படுத்தும் புரட்சிகரமான தமிழ்ப் பார்வையும் அன்றே அவருக்கு வாய்த்துவிட்டது அல்லவா! கடவுள் நம்பிக்கையாளர்கள் செய்யும் ஒரு காரியத்தைச் சமூக எழுச்சிக்காகப் பயன்படுத்தும் திறனும் அன்றே ஏற்பட்டு விட்டதே.
கோயிலில் சுண்டல் வினியோகிக்கிறார் பூசகர். பின்னால் நிற்பவர்களுக்குக் கிடைக் காமல் போய் விடுகிறது சுண்டல். பூசகரிடமிருந்து சுண்டல் சட்டியை வாங்கி, எல்லாருக்கும் சம மாகப் பங்கிட்டு வழங்கும் சமதர்ம உணர்வும் அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே வாய்த்து விட்டது அவருக்கு.
திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் அந்நியத் துணி எரிப்புப் போர் பூதப்பாண்டியில் நடக்கிறது. காங்கிரஸ் பெரியோர் எல்லாரும் மாற்று உடை களோடு கூடி நிற்கிறார்கள். கட்டிய உடையை அவிழ்த்து நெருப்பில் எறிந்துவிட்டுக் கதர் உடை களை அணிந்துகொள்கிறார்கள் அவர்கள். பள்ளிக் கூடம் விட்டு பைக்கட்டோடு வந்து பார்த்துக் கொண்டு நின்ற ஜீவா, தான் அணிந்திருந்த ஆடை களைத் தீயில் போட்டு விட்டு, கோவானாண்டியாக வீட்டுக்குப் போய், தந்தையிடம் உதை வாங்கினார்.
சுசீந்திரம் - தெரு நுழைவுப் போராட்டம். தேசபக்தர் எம். இ. நாயுடு தலைமையில் வீரர்கள் போராடுகிறார்கள். நாகர்கோவிலில் 9-வது படித்துக் கொண்டிருந்த ஜீவா, பையையும், புத்தகங்களையும் பள்ளிக்கூடத்தில் போட்டுவிட்டு, அந்தப் போராளி களோடு கலந்து கொள்ளுகிறார்.
அந்தத் தொடர்பால், வைக்கம் போராட்டத் திலும் கலந்துகொள்கிறார் ஜீவா. அங்கே என்ன பாடலை ஜீவாவும் பெரியவர்களும் பாடுகிறார்கள்? பாரதியின் அச்சமில்லை என்னும் பாடலை, போருக்குத் தமிழைப் பயன்படுத்தப் பயிற்சி எடுக்கிறார் ஜீவா. ஜீவாவின் பள்ளிப் படிப்பு முறிந்து போகிறது.
அங்கிருந்து சேரன் மாதேவி ஆசிரமத்திற்குப் போகிறார் ஜீவா. அங்கும் அவர் சந்திப்பது சாதி ஏற்றத்தாழ்வுச் சிக்கல். இந்தச் சிக்கலை விடுவிப் பதற்காகக் களம் இறங்கியவர் தந்தை பெரியார். பெரியாரோடு ஜீவாவுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. விடுதலையை ஜீவா பன்முகம் கொண்டதாகப் பார்த்தார். அவருடைய ஆளுமையின் அடித்தளம் இதுவே.
சிறாவயல் வந்த ஜீவா, அங்கிருந்த காந்தி ஆசிரமத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். ராட்டை யால் நூற்றார். காந்தியைப் போலவே உடுத்தார், வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் அக்கறை செலுத்தினார். அவர்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டினார். காந்தி ஆசிரமப் பள்ளியில் தலித்களை அதிகம் சேர்த்தார். குறிப்பாகப் பெண் களை அதிகம் சேர்த்தார். ஆசிரமத்தின் புகழ் ஒங்கியது. காந்தியடிகளே அந்த ஆசிரமத்திற்கு ஜீவாவைத் தேடி வரும் நிலை ஏற்பட்டது.
காரைக்குடிக்கு வந்த காந்தி, ஜீவாவைச் சந்திக்க வேண்டுமென்று சா.கணேசனிடம் சொன்ன போது, ‘தகவல் சொன்னால் அவர் ஓடோடி வந்து விடுவார்’ என்றார் கணேசன். இல்லை இல்லை, நான் சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்றார் காந்தி. ஏன்? காந்திக்கும், ஜீவாவுக்கும் இடையில் அப்படியொரு தொடர்பு இருந்தது. யங் இந்தியாவில் வரப்போகிற பாரதம் எப்படி இருக்குமெனக் காந்தியடிகள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் பெண்கள், ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென்றும், புதிய இந்தியாவில் தீண்டாமை இருக்காது என்றாலும் வருணாசிரமப்படி நிலைகள் இருக்கும் எனவும் எழுதியிருந்தார். இதைக் கடுமையாகக் கண்டித்து, அவருக்கு ஒரு கடிதம் ஜீவா எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்த காந்தி, உங்களை நான் பார்க்க வரு வேன். அப்போது இதுபற்றிப் பேசலாம் என்றார். அந்த அடிப்படையில்தான் காந்தியடிகள் சிறா வயலுக்குப் போனார்.
காந்தியார் வந்துவிட்டாரே என ஜீவாவுக்கு அதிசயம். ஜீவா இவ்வளவு இளமையாக இருக் கிறாரே என்று காந்திக்கு அதிசயம். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, காந்தி கேட்டார், ‘ஆசிரமம் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறதே, உங்களுக்கு எவ்வளவு சொத்து’ என்று. இந்த நாடு தான் என் சொத்து என்றாராம் ஜீவா. இல்லை இல்லை, நீங்கள் தான் நாட்டின் சொத்து என்றாராம் காந்தி. அப்படி காந்தியால் பாராட்டப்படுகிறார் ஜீவா.
அதன் பிறகுதான் காந்திக்கும், அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆணும், பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார் ஜீவா. அதுபோல, வருணாசிரமக் கொள்கையையும் அவர் எதிர்த்தார். இப்படிச் சொல்லுகிறீர்களே, உங்களுடைய வழிகாட்டி யார்? உங்களுடைய மதம் என்ன? என்றார் காந்தி. ஜீவா சொன்னார்: என் வழிகாட்டி பாரதி. என் மதம் வள்ளுவம்.
புரிகிறதா? ஜீவா தமிழ் சார்ந்து அனைத்தையும் சிந்தித்தார். அவர் பேசிய சமதர்மமும், தமிழுக்குள் திரண்டு நிற்கும் சமதர்மமே. இந்தப் பாதை தான் அவரை விரிவுபடுத்தியது. எல்லாருக்குமானவராக் கியது.
கோவை பஞ்சாலைத் தொழிலாளர் போ ராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த அவர் தமிழையே ஆயுதமாகப் பயன்படுத்தினார். “காலுக்குச் செருப்பும் இல்லை” என்ற பாடல் நெருப்புப்போலச் சுடும் ரோட்டில் நின்றுகொண்டு போராடும் தொழி லாளர்களுக்காகவே அவரால் பாடப்பட்டது.
அதிகம் போனால் ஆயிரம் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அன்றைய ஊர்வலத்தில் பதினைந்தாயிரம் பேருக்கு அதிகமான வர்கள் திரண்டிருந்தார்கள். ஜீவா எப்படி அவர்களைப் போராடும் தொழிலாளர்களோடு இணைத்தார்? தமிழால் இணைத்தார்.
கூட்டம் பெருத்துவிட்டது. போலீசார் கூட்டம் நடந்துவதற்குத் தடை சொன்னார்கள். கூட்டத்தைப் பிற இடங்களில் நடத்துவது முடியாது. ஆனாலும் நடத்தியாக வேண்டும். சுடுகாட்டுக்குப் போவோம், அங்கே கூட்டம் நடத்துவோம் என்றார் ஜீவா.
சுடுகாட்டுப் பயணத்திற்கு ஒருபோதும் போலீஸ் தடையில்லை. இரவு சுடுகாட்டில் எந்த வசதியும் இல்லை. ஒரு ஸ்டூல் மேல் ஏறி நின்றார் ஜீவா. அவர் முகத்தைக் காட்டுவதற்காக, இன்னொருவர் இன்னொரு ஸ்டூல் மீது ஒரு விளக்கோடு ஏறி நின்றார். கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். ஜீவா பேசுகிறார், பேசுகிறார், போராட்டம் வெற்றி பெறும் வரை பேசுகிறார்.
இதே கோவையில் தான் இன்னொரு நிகழ்ச்சி. எந்த முதலாளிகளை ஜீவா போராடிப் பணிய வைத்தாரோ, அந்த முதலாளி ஒருவரின் மில் வாசல். தோழர்களைக் காண்பதற்காக ஜீவா நிற்கிறார். தோழர்களைச் சந்தித்து விட்டு, அவர் ஈரோடு செல்ல வேண்டும். அதற்குரிய பணத்துடன் தோழர் ஒருவர் அவருக்கு வழித்துணையாக வந்திருந்தார்.
திடீரென மில் வாசல் திறக்கவே, முதலாளியின் படகுக்கார் வெளியே வருகிறது. ஜீவாவைக் கண்டதும் கார் நிற்கிறது. காரிலிருந்து இறங்கிய முதலாளி, ஜீவாவிற்கு வணக்கம் சொல்லுகிறார். ஜீவாவும் பதில் வணக்கம் போட்டு விட்டு, அவரிடம் போ கிறார். இருவரும் உரையாடுகிறார்கள். புறப்படும் போது, அந்த முதலாளி காரினுள்ளே இருந்த தன் பேத்தியிடம் “ஜீவா தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு” என்கிறார். அந்தக் குழந்தையும்’ தாத்தாவுக்கு ‘வணக்கம்’ என்றது. தாத்தா என்று சொல்லி வணங்குகிறது குழந்தை, வெறும் கையோடு எப்படிப் பதில் வணக்கம் சொல்லுவது? அங்குமிங்கும் பார்த் தார் ஜீவா. பெண் ஒருத்தர் ஒரு கூடை மாம்பழங் களோடு உட்கார்ந்திருந்தார். பழத்தைக் கூடை யோடு எடுத்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிட்டார் ஜீவா.
பக்கத்தில் இருந்த தோழர்களுக்கு அதிர்ச்சி. மாம் பழக்கூடைக்கான பணத்தை எப்படிக் கொடுப்பது? ஆனால் தன்னை வழியனுப்ப வந்த தோழர்களிட மிருந்த பஸ்சுக்கான பணத்தை வாங்கி அந்த மாம் பழ வியாபாரியிடம் கொடுக்கிறார் ஜீவா. அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி. இனி பஸ் கட்டணத்திற்குப் பணம்?
‘அந்தச் சிறுமிக்கு ஒரு மாம்பழம் கொடுத் தால் போதுமே’, என்று அவரைக் கண்டித்தார்கள், தோழர்கள். “முதலாளி தகுதிக்குத் தொழிலாளி வர்க்கம் இளைத்துப் போய்விட்டதா? தமிழ்ப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்துக்கு இல்லாமல் போய்விட்டதா? பேசாமல் இருங்கள், பணம் வரும்” என்கிறார் ஜீவா. மில்லின் மணி ஒலிக்கிறது. தொழி லாளர்கள், வெளியே வருகிறார்கள். ஜீவாவைக் கண்டதும் மகிழ்ச்சியோடு அவர்கள் அவரை மொய்க் கிறார்கள். நலம் விசாரிப்பு முடிந்ததும், ஜீவா தன் நிலையைச் சொல்லி, தொழிலாளி வர்க்கமே காசு கொடு என்கிறார். சிறுதுளி பெருவெள்ளம். தேவைக்கு அதிகமாக வசூலான பணத்தைக் கட்சி நிதியாகக் கொடுத்துவிட்டு, ஈரோடுக்குப் புறப்படுகிறார் ஜீவா.
1951-இல் ஜீவா சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரைக்குடி சா.கணேசன் அவரைக் கம்பன் விழாவுக்கு அழைத்தார். ஜீவாவின் இலக்கிய ஆழம் அவருக்குத் தெரியும். ஆனால் சா.கணேசனின் நண்பர்களான சீனிவாசராகவன் முதலியோருக்கு ஜீவாவைப் பற்றி ஒரு பயம். ஜீவா ஒரு கம்யூனிஸ்டு சிங்கம். அவரைக் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது பேசினால் என்ன செய்ய? தலைமைக்கு சீனிவாச ராகவனையும், ஜீவா ஏதாவது தவறாகப் பேசி விட்டால் அதை மேடையிலேயே கண்டிக்க கணபதியா பிள்ளையை ‘கம்பனும், வம்பனும்’ என்னும் தலைப்பில் பேசவும் ஏற்பாடு செய்தார்கள்.
முழுக்க முழுக்க கம்பதாசர்களின் கூட்டம் அது. ஜீவா என்றதால் தொழிலாளி வர்க்கமும் வந்திருந்தது. ஜீவா மேடையில் ஏறி முழங்கத் தொடங்கினார். அவர் பேச்சு புதியது. பார்வை புதியது. செய்தி புத்தம் புதியது. சாதாரணமாகக் கம்பன் விழா மேடையில் நாற்பது நிமிடமானால் சிவப்பு விளக்கு எரியும். நாற்பத்தி ஐந்தாவது நிமிடம் ஒலி பெருக்கி நின்று விடும்.
ஆனால் ஜீவா எந்தத் தடையுமில்லாமல் ஒன்றே கால் மணி நேரம் பேசினார். பேச்சு முடிந்ததும், கணபதியா பிள்ளை எழுந்து, இதுவரை பேசியது கம்பன். இதற்கு மேலும் பேசினால் அது வம்பன் என்று முடித்துக் கொண்டார். தலைவர் சீனிவாச ராகவன் எழுந்து பேசினார்: சிவப்பு விளக்குப் போட்டு, ஜீவாவை நான் உரிய நேரத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். செய்யவில்லை. உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார். இல்லை இல்லை, நிறுத்தியிருந்தால்தான் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்கள் மக்கள். இப்படியான பேச்சுக்கள் ஒன்றா! இரண்டா!
கூட்டம் முடிந்த பிறகு அறிஞர்கள் உரையாடிக் கொண்டிருந்த போது, சீனிவாசராகவன் ஜீவாவிடம் சொன்னார், “நீங்கள் கம்பனை இவ்வளவு ஆழமாகப் பேசினீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டு ஜனங்கள் மெய் மறந்துபோனார்கள். நீங்கள் ஏன் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு, இவ்வளவு சிரமப்பட வேண்டும்? வெளியே வாருங்கள். எங்களோடு சேருங்கள். தமிழோடு சிறப்பாக வசதியாக வாழுங்கள்” என்றார். சிரித்துக் கொண்டே ஜீவா சொன்னார்: நீங்கள் என்னை விடத் தமிழை ஆழமாகக் கற்ற வர்கள். அறிஞர்கள், கம்பனில் கரை கண்டவர்கள். ஆனாலும், உங்கள் பேச்சில் இல்லாத கவர்ச்சி என் பேச்சில் இருக்கிறதே ஏன்?
ஏனென்றால், நீங்கள் இலக்கியங்கள் வழியாகக் கம்பனைப் பார்க்கிறீர்கள். நானோ தொழிலாளியின் வழியாக, விவசாயியின் வழியாக, உழைக்கும் வர்க்கத்தின் வழியாக, மார்க்சியத்தின் வழியாகக் கம்பனைப் பார்க்கிறேன். பார்த்துப் பேசுகிறேன். இதனால் தான் என் பேச்சுக்கு இத்தனை வலிமை இருக்கிறது. ஆனால் நீங்களோ, மக்களோடு உள்ள என் தொப்புள் கொடி உறவை அறுத்து விட்டு வா என்கிறீர்கள், இது நியாயமா என்றார்.
ஜீவா கம்பனைப் பார்த்த பார்வை மண் சார்ந்த பார்வை. மக்கள் சார்ந்த பார்வை. அது மார்க்சீயப் பார்வை. எதையும் உழைக்கும் மக்கள் சார்பில் நின்று பார்க்க வேண்டும். மேலோர் சார்பில் நின்று பார்க்கக் கூடாது. ஆதிக்கங்களின் சார்பில் நின்று பார்க்கக் கூடாது. இறுகிய உளுத்துப் போன, சட்டதிட்டங்கள் நிலையிலிருந்து பார்க்கக் கூடாது. மேலுலக நிலையிலிருந்து பார்க்கக் கூடாது. அடித்தளச் சார்பில் இருந்து பார்க்க வேண்டும்.
இப்படித்தான் ஜீவா மார்க்சீயத்தைத் தமிழோடு, தமிழ்ச் சமூகத்தோடு, தமிழ் வாழ்வோடு இணைத்துப் பார்க்கிறார். வள்ளுவரை, இளங்கோவை, கம்பரை, பாரதியை இப்படிப் பார்த்து மதிப்பிடுகிறார். இது மக்களின் மனங்களினுள்ளே ஊடுருவிச் செல்லும் மண்சார்ந்த மார்க்சீயப் பார்வை. இதனால் தான் உலகப் பேரறிஞன் என்று அவரே கொண்டாடிய திருவள்ளுவரை விமர்சித்துப் பெண் பற்றிய பார் வையில் இவரிடம் வளர்ச்சி இல்லை என்கிறார் ஜீவா.
தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் ஜீவா வுக்கும் உள்ள உறவு பிரபலமானது. திருப்பத்தூர், திருத்தளிநாதர் கோயில் திருவிழாவில், அப்பர் அடிகளைப் பற்றிப் பேச அவரை அழைத்திருந்தார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஜீவா பேச்சைக் கேட்கக் கூடியிருந்த கூட்டம் முழுக்க முழுக்க சைவப் பழங்களின் கூட்டம். அந்தக் கூட்டத்தில், அப்பர் வழியாக சமதர்மத்தைப் பேசினார் ஜீவா “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்னும் பாடலை எடுத்துச் சொல்லி, இங்கே அப்பர் அடிகளின் உள்ளடக்கிடக்கை மன்னர் ஆட்சிக்கு எதிரானது, மக்களுக்கு ஆதரவானது, மக்கள் மனதில் அஞ்சாமையை விதைப்பது என விளக்கினார். அதே போல அப்பருடைய சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் நவீன கோணத்தில் விளக்கி, அப்பர் பெருமான் சாதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானவர் என்ற கருத்தின் வழியாகத் தற்காலச் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் நுழைந்துவிட்டார் ஜீவா. ஒன்றேகால் மணிநேரம் கழிந்ததும், பேச்சை முடித்து விடட்டுமா? என்றார் ஜீவா. ‘இல்லை. இன்னும் பேசுங்கள்’ என்றனர் சைவப் பழங்கள். கூட்டம் முடிந்ததும், அவர்கள் ஜீவாவைக் கட்டித் தழுவி, இது தான் கம்யூனிசம் என்றால், நாங்கள் எல்லாரும் கம்யூனிஸ்டுகளே என்றார்கள்.
மார்க்சீய அறிஞர்களிடம் ஒரு கேள்வி எழலாம். மார்க்சீயத்தை இப்படி அறிமுகம் செய்தால், மார்க் சீயத்தின் நிலை என்னவாகும்? உண்மைதான். மார்க்சீய அறிஞர்கள் விளக்கும் மார்க்சீயம் வேறு. ஜீவா மக்களுக்கு விளக்கும் மார்க்சீயம் வேறு. ஜீவா மார்க்சீய அறிஞர் என்பதையும், மார்க்சீய அடிப்படை நூல்கள் சிலவற்றை எழுதியவர் என் பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஜீவா, மக்களிடம் பேசும் போது ஏன் இவ்வளவு எளிமையாகப் பேசுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மார்க்சீய தத்துவம் யாருக்குத் தேவை? மார்க்சிய ஒளியில் மக்களுக்குத் தொண்டு செய்யக் களத்தில் நிற்கும் செயல் வீரர்களுக்கு வழிகாட்டத் தேவை. சாதாரண மக்களுக்கு மார்க்சீயம் அப்படியே கெட்டியாகப் புகட்டப்படுமானால், அது செரி மானம் ஆகாது. மார்க்சீயம் சமூக அறிஞர்களால் செரிமானம் செய்யப்பட்டு, மக்கள் விரும்பிச் சுவைக்கும் மார்க்சீயப் பாலாக்கப்பட வேண்டும். சுவை மிக்க மக்கள் பாலாக்கப்பட வேண்டும். அதையே மக்கள் விரும்பிப் பருகுவார்கள். இந்த ரசவாதத்தைச் செய்யத் தெரிந்தவர்களே மக்கள் தலைவர்கள். அவர்களே மக்களுக்குச் சொல்லப் பட வேண்டிய மார்க்சீயம் சார்ந்த கருத்துக்களைத் தங்கள் திறமையால், மக்களுக்கான மொழியில், மக்களை ஈர்க்கும் வகையில், சுவை மிக்க கருத்துக் களாக்கிக் கதைகளாக்கி மக்களுக்குத் தருவார்கள்.
மார்க்சீயத்தின் பக்கம், தொழிலாளி, விவசாயி, உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் மக்களைச் சார்பு கொள்ளச் செய்ய இதுவே சிறந்த வழி.
மார்க்சீயத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், அந்த முயற்சியில் இறங்குவதற்கும் இது தூண்டு கோலாய் அமையும். ஆனால் முதன் மையான இதன் நோக்கம் மக்கள் மனங்களை மலர் விப்பதே. ஒரு ‘மக்கள் ஆதரவு’ உணர்வு நிலையை உருவாக்குவதே. மார்க்சீயத் தத்துவத்திற்கும், மக்கள் மனங்களுக்குமிடையே இப்படித்தான் உறவுப் பாலம் அமைக்க முடியும். இதைத்தான் ஜீவா தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்.
“ஜீவாவின் சோசலிசம் கம்பன் வழியாக வந்த சோசலிசம், பாரதி வழியாக வந்த சோசலிசம்” எனக் கலாநிதி சிவத்தம்பி கொண்டாடியது இந்தக் கோணத்தில்தான்.
இந்தியாவில் 80ரூ மக்கள் சமய நம்பிக்கை யுள்ளவர்கள். மார்க்சீயம் அந்த சமய நம்பிக் கையின் வழியாக அவர்களினுள்ளேயும் ஊடுருவ வேண்டும். ஊடுருவி, மார்க்சீயத்திற்கு ஆதரவான, கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவான, ஒரு மன நிலையை அவர்களிடமும் உருவாக்க வேண்டும்.
இந்தப் பேராசையில் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்தார் ஜீவா. மற்ற மாநிலங்களிலும் தலைமை இடத்திலும், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், மக்கள் நாடக மன்றமும் தனித்தனியே அமைக்கப் பட்டுப் பணியாற்றின. மொழி அடையாளம் இல்லாத அமைப்புகள் அவை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் அடையாளத்தோடு ஒரு பண்பாட்டமைப்பை உருவாக்கினார் ஜீவா. கலையும் இலக்கியமும் இணையும் போது தான் பண்பாட்டுத் தளத்திற்கான போர்க்களம் விரிவாக உருவாகும். எனவே தான் கலை இலக்கியப் பெருமன்றம் என்னும் பெயர் தமிழ்நாட்டு அமைப்புக்குச் சூட்டப்பட்டது. இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் சம மதிப்புக் கொடுக்கப் பட்டது.
முதல் மாநாட்டில் முழு நிகழ்ச்சிகளையும் ரசித்துவிட்டு, அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு சொன்னார்: “ஜீவா உங்களின் இந்தப் பாதை தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். இந்த மாநாட்டைச் சென்னையில் நடத்த வேண்டும்.” அதுமட்டுமல்ல, மாநாட்டுச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டார்.
அந்த மாநாட்டில் தான், அடித்தள மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும், சேகரிக்கவும், ஆராயவும் என “நாடோடி இலக்கியக்குழு” என்ற ஒரு குழு பேராசிரியர் நா.வானமாமலை தலை மையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் செயல் பாடுகள்தான் அடித்தள மக்களின் எழுச்சிக்கான ஆற்றல் மூலங்களைத் திரட்டி மக்களுக்கு வழங்கின.
இவ்வாறு அணுகும்போது, தமிழ் வழியாக, தமிழ் இலக்கியங்கள் வழியாக, ஜீவா மக்களுக்கு மார்க்சீயத்தை எப்படி அறிமுகப்படுத்தினார், தமிழ் வழியாக மார்க்சீயத்தையும் தமிழையும் எப்படி இணைத்தார், எழுச்சியை ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்தத் திசைவழியைப் பலப்படுத்த வேண்டி நாம் உழைக்க வேண்டும்.
கடுமையான காலங்கள் நம்மை எதிர் நோக்கி யுள்ளன. முற்போக்கான முகங்களோடு மதவாத சக்திகள் தமிழகத்தினுள்ளே ஊடுருவிக் கொண்டிருக் கின்றன. இதை எதிர் கொள்ள நம் பண்பாட்டுப் போராட்டத்தை வலுப்படுத்தியாக வேண்டும். ஜீவாவின் பாதையை நாம் விரிவுபடுத்த வேண்டும். அவர் தீட்டித் தந்த தமிழ் ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும்.
(19.1.2013 அன்று திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக நடந்த ஜீவா 50 வது ஆண்டு நினைவு விழாவில் பேசியது.]

கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை

கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை.
இன்றைய தமிழ் சமுதாயத்தில் நம் அன்றாட வாழ்வில் தமிழோடு ஆங்கிலம் தவிர்க்க முடியாத அளவு கலந்துவிட்டது. கலப்பு தமிழ் பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி என எதையும் விட்டுவைக்க வில்லை .மாணவர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை கலப்பு தமிழில் தான் பேசுகின்றனர். குழந்தைகளும் கலப்புதமிழ் தான் உண்மையான தமிழ் என நம்பி அதையே பேசி பழகி வருகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டியபொறுப்பு அனைத்து தமிழ் மக்களுக்கும் உள்ளது. இதை இப்படியே நடைமுறையில் விட்டுவிட்டால் , நாளை தலைமுறை தமிழேபேசமுடியாமல் ஆங்கிலம் மட்டுமே பேசும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. இதை மாற்றும் பொருட்டு பொது மக்களுக்குவிழிப்புணர்வு கொடுக்க தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் தீவிர பிரச்சாரம்மேற்கொண்டனர். பலதரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடம் தூய தமிழில் பேச ஊக்கம் கொடுத்தனர். அவர்களிடம் தூய தமிழ்பேசும் போட்டியும் நடத்தினர். அவர்களிடம் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி காணொளியாக பதிவும் செய்தனர்.
பின்பு அவர்கள் தூய தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "தூய தமிழில் பேசுவோம் " என்ற பதாதையை ஏந்த வைத்துபுகைப்படமும் எடுத்தனர். பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தூயதமிழில் உரையாடினர் . மற்றவர்களுக்கும் இது குறித்துசொல்வோம் என உறுதி அழைத்தனர்.
முடிவில் 'தமிழில் பேசுவோம் தமிழாராய் இணைவோம் என்ற பசை ஒட்டியை கடற்கரையில் கூடிய பல நூறு மக்களிடமும்,கடைகளுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் கொடுத்தனர். வாழ்க தமிழ் என்ற வாசகம் அடங்கிய பசைஒட்டிகளும்விநியோகிக்கப்பட்டது.