புதன், 21 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் பூர்வீக குடிமக்களை அழிக்க கூலிப்படை!!

 சட்டிஸ்கர் : காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்;

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது.

இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது.

இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது.

பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு.

கருத்துகள் இல்லை: