வியாழன், 29 ஆகஸ்ட், 2013

விரைவில் உணர்வாய் பகையே உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே.

“ தலைகள் குனியும் நிலையில் இங்கே
புலிகள் இல்லையடா – யாரும்
விலைகள் பேசும் நிலையில் எங்கள்
தலைவன் இல்லையடா… ”



புயலோடு இடிசேர்ந்து மழைபொழியும் நேரம்
குடைவிரிக்கும் எண்ணம் எமக்கில்லை.
மயிலாசனத்திலமர்ந்து
அகிற்புகையில் தலையுலர்த்தும் ஆசையும் எமக்கில்லை.
எம்மக்களுக்காகவும்,
எமது மண்ணுக்காகவும்,
பாரச்சிலுவை சுமக்க வேகமெடுத்த எமக்கு
கொலுமண்டபம்,
வெண்கொற்றக்குடை,
திறைசேரித் திறப்பு,
அந்தப்புரம் என்று
எந்தச் சபலமும் இல்லை.
மூச்சுப்பிரியும் நொடிவரை முன்னெறுவோம்.
தடையேதும் இடைவந்து தடுக்கமுடியாது.
அருச்சுனனுக்குத் தெரிந்த மச்சயந்திரமாய்
தமிழீழமொன்றே விழிகளுக்குத் தெரிகிறது.
உயிர் பெரிதுதான் ஒத்துக் கொள்கின்றோம்.



அதனிலும் பெரிது சுகந்திரம்.
இழிநிலை சுமக்கும் தமிழர்களாக இருப்பதிலும்
பழிதுடைக்க எழுவதே பெருவாழ்வு.
பழிதுடைக்க எழுந்து களமாடி மடிந்து
குழியிலுறங்குவது குபேர வாழ்வு.
மாயமானுக்கு ஆசையுறும் மயக்கமேதும் எமக்கில்லை.
ஐந்து ஊர் கேட்டு,
ஐந்து வீடு கேட்டு,
அதுவும் இல்லையென்றான பின்னர் போர் கேட்டு
தூதுவிட எங்களிடம் “கண்ணபரமாத்மா”வும் இல்லை.
நாங்கள் பாண்டவரும் இல்லை.
தர்மத்துக்கு சமரசங்கள் இல்லை.
அதர்மத்துக்கு நீதி நியாயங்கள் இல்லை.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வென்றால்
முதலிற் கைநீட்டுவது புலிகள்தான்.
போரின் மூலமே பிரச்சனைக்குத் தீர்வென்றால்
பிரபாகரன் அதற்கும் தயார்தான்.
சரி அடுத்தது என்ன?
புலிகளை அழித்துவிட்டுப் பிரச்சனைக்குத் தீர்வென்றால்
தர்மம் தோற்றுவிட்டதாகவல்லா சரித்திரம் எழுதும்.
“ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணடையுங்கள்”
அதன் பிறகு பேசலா மென்றால்…..
நாங்களென்ன “சம்பற்பள்ளத்தாக்கு”க் கொள்ளைக்காரரா?
குனியாத தலையும்,
வளையாத முதுகும்,
தணியாத தாகமும்,
உள்ளவர் புலிகளென்று உலகறியும்.
சத்தியதேவதைக்கு ஒப்புக் கொடுப்பரென்று
சந்திரிகா அரசுக்கும் தெரியும்.
வா பகையே!
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும், பிஞ்சாகவும் எம் மரமுலுப்பிக் கொட்டு.
வேரை தறித்து விழுத்து.
தீமூட்டி எரி எம் தேசத்தை.
ஏனினும் பணியோமென்பதை நெஞ்சில் வைத்திரு.
இறுதிவெற்றி எவருக்கென்று பகடையுருட்டு
தோல்வி உனக்கின்றி எமக்கில்லை.
`கிபிர்` இருக்கும் திமிர் உனக்கு.



உலகநாடுகள் அள்ளித் தருனென்ற
எண்ணத்தில் வந்து எரிக்கின்றாய்.
எரித்து முடி.
எல்லாம் எரியுண்டு போனதாய் எண்ணி
குளித்துவிட்டு நீ தலைசீவும்போதே குண்டுகள் வெடிக்கும்.
இதுதான் புலி.
இந்த இரகசியத்திற்குப் பெயர்தான் பிரபாகரன்.
எம்மை வெல்லும் திறன் உனக்குமில்லை.
உன் படைக்குமில்லை.
ஹலோ அநுருத்த ரத்வத்த!
புதுமாப்பிள்ளைக்குப் பெரிய வாழ்த்துக்கள்.
ஐம்பத்தாறு வயதில் உமக்குக் கலியாண ஆசை
ஆறிரண்டு பருவத்தில் எமக்கு விடுதலை வேட்கை.
எப்படி எம்மை நீ வெல்லுவது சாத்தியமாகும்?
பத்திரகாளியாய் நீங்கள் பலியெடுத்துக் கொள்ள
அப்படியென்ன கேட்டோம் உங்களிடம்?
கொழும்பை எமக்குத் தாவென்றா கேட்டோம்?
காலித் துறைமுகத்துக்கு வேலியிடவா வந்தோம்?
தலதாமாளிகையின் தங்கக் கவசத்தை
கொடுவாள் கொண்டு கொத்தவா நின்றோம்?
சிங்களவருக்கு இந்நாடில்லை யென்றாவது சொன்னோமா
நமது நிலத்தைத்தானே நாங்கள் கேட்டோம்?
“நம்மை நாமாக…. நமது நிலத்தில்வாழ
எம்மை விடும்” என்பது எப்படி தவறாகும்?
இதிலென்ன பிழைகண்டு இந்தக்கூத்து?
மாங்கனித் தீவென்றும், மரகத்த்தீவென்றும்
நாங்கள் எல்லோரும் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருக்க
நீங்கள் வேட்டுக்கள் தீர்த்துக் கொண்டீர்.
வந்தது வினை.
அதன் பிறகும் உம்மோடு அண்டியிருக்கவென்று
விதம் விதமாய் முயன்றோம்.
நீங்கள் விடவில்லை.
கதை முடிந்து போனது.
கட்டிய கோமணத்தையும் கழற்றென்றீர்கள்.
எப்படி நிர்வாணமாக நிற்கமுடியும்?
வெளியேறிக் கொண்டோம்.
இன்று ஆநிரை கவரவா ஊர் புகுந்துள்ளீர்?
விளைவு என்னவானாலும் விடமாட்டோம்.



எம்மண்ணில் முறியும் ஒவ்வொரு மரமும்
முளைவைத்து விட்டே முறிகிறது.
பிரியும் ஒவ்வொரு உயிரும்
அடுத்தகணமே இன்னோர் உடலாகி நடமாடுகிறது.
தளரோமென்று காற்றுச் சத்தமிடுகிறது.
உன்மீதான கோபத்தில் முகம் சிவந்து
இன்ங்கு வெள்ளைப் பூக்களும் சிவப்பு நிறமாயின.
கருப்பைக்குள் எம்பிள்ளைகள் அசையும் போதே
நெருப்புக்குள் நீந்தப் பயிற்சியெடுக்கின்றனர்.
எங்கள் அத்திவாரமே வித்தியாசமானது.
புலிகள் கறுப்பு
பிரபாகரன் நெருப்பு!
விரைவில் உணர்வாய் பகையே!
உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே!


- ஆனி 1996 -

கருத்துகள் இல்லை: